Home Archive by category

”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை”

திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையின் சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், தமிழ்நாடு காவல்துறை நன்கு பயிற்சி பெற்ற, திறமையான காவலர்களைக் கொண்டது என்றும், அது தற்போது அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.

மேலும், “சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியல் ஆகும்” என்று தெரிவித்தார்.

பல்வேறு தரப்பினருடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துவதால் ராஜ்பவன் தேநீர் கடையாக மாறி வருகிறது என விமர்சகர்கள் கூறுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ”ஆளுநர் என்பவர் ராஜா அல்ல. ராஜ்பவன் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். அது மக்களுக்கான இடம். ’ராஜ்பவன்’ என்ற பெயரை ’லோக் பவன்’ ஆக மாற்ற வேண்டும் என நான் யோசித்து வருகிறேன். மாநில மக்களின் நலனுக்கான சக்தியாக ஆளுநர் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் தான் நான் அவ்வப்போது பல்வேறு தரப்பினரை ராஜ்பவனில் சந்திக்கிறேன்” என்று கூறினார்.

Related Posts