Home Archive by category

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

கனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் சர்வதேச மாணவர்கள் பலர், படிப்பை முடித்து பணி உரிமம் பெற்று, பணி அனுபவமும் பெறுகிறார்கள்.

ஆனால், அவர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது பூதாகாரமாக வெடிக்கிறது எதிர்பாராத ஒரு பிரச்சினை...

கரம்ஜீத் கௌர் (Karamjeet Kaur, 25) என்ற இந்தியப் பெண் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில், அவர் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க, எதிர்பாராத பிரச்சினை ஒன்று துவங்கியது. கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அலுவலர் ஒருவர், கரம்ஜீத் அளித்த கல்லூரி அங்கீகாரக் கடிதம் போலியானது என தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை உருவானது.

முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படிப்பட்ட பிரச்சினைகள் குறித்து செய்திகள் வெளியாகிவந்த நிலையில், பின்னர் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Servicesஎன்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் 700 மாணவர்கள்.

அவர்கள், 2019 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி கடிதங்கள் அனுப்பியது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசிடமிருந்து சற்று இரக்கம் கிடைக்கும் வகையில், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகிறார்கள்.

இந்த வாரம் ரொரன்றோவில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள் அவர்கள். 

Related Posts