Home Archive by category

யாழ் நெடுந்தீவு கூட்டுப்படுகொலை...! கைதானவர் கனடிய குடியுரிமையுடையவர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புங்குடுதீவு, 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 50 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் கனடிய குடியுரிமையுடையவர் எனவும் ஹெரோயின் பாவனையாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை அவர் தொடர் ஹெரோயின் பாவனையால் இயல்பு நிலையில் இல்லாதவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகால பகையை தீர்க்க இந்த கொலையை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலையின் பின்னர்,  40 பவுண் தங்கநகைகளையும் அவர் திருடிச் சென்றுள்ளார். நகைகளும் கைப்பற்றப்பட்டன.

கொலைச்சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்படி, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அவரது உறவினர்கள்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் தூக்கத்திலிருந்த போது, கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு நாய் குரைத்து சத்தமிட நாயையும் வெட்டியுள்ளார். நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டது.

இந்த சமயத்தில், அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும், அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். கத்தியை நெடுந்தீவிலுள்ள கிணறொன்றில் போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இன்று(23) காலை சான்றுப் பொருட்களை மீட்க நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார் என தெரிவிக்கப்பபடுகின்றது.

Related Posts