“அண்ணாமலையை சும்மா விடுவோமா...? நானும் வழக்கு தொடருகிறேன்” - உதயநிதி ஸ்டாலின்
DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டார். இதனை திட்ட்வட்டமாக மறுத்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கட்சியின் மீது ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கையை அண்ணாமலைக்கு அனுப்பினார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் 1000 இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பண்டிகையொட்டி, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பிய அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “என்னிடம் மட்டும் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள். ஆனால் அண்ணாமலையிடம் ஸ்கூல் டீச்சர் மாதிரி பேசுவதை மட்டும் கேட்டு வருகிறீர்கள். அண்ணாமலை மீது நானும் மான நஷ்ட வழக்கு தொடரலாம் என்று உள்ளேன். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம்” என்று கேள்வி எழுப்பினார்.