Home Archive by category

ஜெயலலிதா மரணம்... சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு... உயர்நீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தபடி,  சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து, நடவடிக்கை எடுக்க  கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும், அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சுகாதார துறை முன்னாள் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோரும் தகவல்களை மறைத்தார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பது தொடர்பான விசாரணை நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் தற்போதைய அரசு பிளீடர் முத்துகுமார் ஆகியோர், விசாரணை ஆணைய சட்டப்படி, ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க முடியும் எனவும், நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடும்படி கோர முடியாது என்றனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Posts