Home Archive by category

எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிக்கப்படும் தமிழர் நிலம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசதிணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனை அழைத்து அங்குள்ள நிலைமைகளைக் காண்பித்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் - கோட்டக்கேணியிலிருந்து, அம்பட்டன் வாய்க்கால், தீமுந்தல், பணம்போட்ட கேணி, நாயடிச்ச முறிப்பு, வெள்ளைக்கல்லடி, சிவந்தா முறிப்பு, சூரியனாறுவரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் அரச திணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கோ, கமக்கார அமைப்பினருக்கோ அறிவித்தல் வழங்கப்படாமலேயே குறித்த எல்லைக் கற்கள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக மக்களுக்கு அறிவித்தல் வழங்காமல் எல்லைக்கல் நாட்டும் செயற்பாடொன்று, ஏற்கனவே கடந்தவருட இறுதிப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அப்போது இது தொடர்பில் உரிய அரச அதிகாரிகள் மற்றும், மணலாறு பகுதி நில அளவைத் திணைக்களத்தினரோடு பேசி வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மற்றும், அப்பகுதித் தமிழ்மக்கள் அங்கு நாட்டப்பட்ட எல்லைக்கற்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அத்துடன், இனிமேல் இவ்வாறான எல்லைக்கல் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவிருந்தால் காணிகளுக்குரிய மக்களுக்கு, கமக்கார அமைப்பினருக்கு, மாவட்டசெயலர் மற்றும், பிரதேசசெயலர் ஆகியோருக்கு அறிவித்தல் வழங்கியே எல்லைக்கல் நாட்டப்படுமென, எல்லைக்கல் நாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழ்மக்களுக்குரிய வயல் காணிகளில் எல்லைக்கற்கள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பினை ஏற்று குறித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த செயற்பாடு தொடர்பில் மாவட்டசெயலர் மற்றும், பிரதேசசெயலர் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்

Related Posts