Home Archive by category

உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…

“தாயில்லாமல் நானில்லை… தானே எவரும் பிறந்ததில்லை” என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்… இந்த பாடல் வரிகளை பொய்யாக்கும் முயற்சியில் சர்வதேச மரபணு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்… அதுபற்றி விரிவாக பார்ப்போம்…

லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ் சிரிக் இன்ஸ்டிடியூட்டில் மனிதர்களின் மரபணு ஆராய்ச்சி குறித்த 3வது சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. அதில் ஜப்பானில் உள்ள கியூஷு பல்கலைக்கழக பேராசிரியர் கட்ஷுஷிகோ ஹயாஷி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் ஆண்களின் திசுக்களில் இருந்து பாலூட்டிகளின் கருமுட்டைகள் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் கூறியது தான், மனித குலத்திற்கு அதிர்வூட்டுவதாக அமைந்தது. அதாவது தம்முடைய ஆராய்ச்சியின் அடிப்படையில் செயல்பட்டு முன்னேற்றம் கண்டால், பத்தாண்டுகளுக்குள் ஆணின் திசுவில் இருந்து திறன்மிக்க மனித கருமுட்டையை உருவாக்கலாம் என்று கூறியுள்ளார். மற்ற விஞ்ஞானிகளோ, இன்னும் பெண்ணின் திசுவில் இருந்தே மனித கருமுட்டைகளை உருவாக்காதபோது இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறார்கள்.

அதே நேரத்தில் இரண்டு ஆண் எலிகளின் திசுக்களைக் கொண்டு, அவற்றின் மரபணுக்களுடன் ஒரு எலியை உருவாக்கி ஏற்கனவே விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அதற்கு அவர்கள் மரபணு பொறியியல் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆணின் திசுவில் இருந்து வெற்றிகரமாக எலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து ஹயாஷி அணியினர், மனித திசுக்களை வைத்து கருமுட்டைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். இதில் பெரும் தடையாகவும் சிக்கலாகவும் பார்க்கப்படுவது, ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சிக் கூடத்தில் முட்டைகளை உருவாக்குவதையும், அதன் பாதுகாப்பதும் தான்.தொழில்நுட்பத்தின் உதவி மற்றும் ஆராய்ச்சியை வைத்துப் பார்த்தால், 10 ஆண்டுகளில் மனிதர்களின் கருமுட்டையை உருவாக்கலாம் என்றும், இதனை அறிவியலாக மட்டும் பார்க்க முடியாது என்றும் சமுதாயம் சார்ந்தது என்றும் ஹயாஷி தெரிவித்தார். அத்துடன் இந்த ஆராய்ச்சியைப் பயன்படுத்தி, குழந்தைப் பேரின்மையால் அவதிப்படும் பெண்களுக்கும் உதவலாம் என்றார்.

அதாவது டர்னர்ஸ் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெண்கள், எக்ஸ் குரோமோசோம்கள் இல்லாத அல்லது பகுதியாக காணாமல் போன பெண்களுக்கும் இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும் என்றார். பெரும் தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் பயன்படுத்தி, மனித திசுக்களை உருவாக்குதலும் அவற்றில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டையை உருவாக்கும் பெரும் சவாலானதாக இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் தன் பாலின ஈர்ப்பாளர்களின் குழந்தை ஆசையும் இந்த ஆராய்ச்சி வெற்றி அடைந்தால் பூர்த்தியாகும். அப்படி நடந்தால் இந்த கட்டுரையின் முதல் வரியை பொய்யாக்கி உலகம் புதிய தடம் பதிக்கும்…

Related Posts