தீவிரமடையும் போர்! உக்ரைனுக்கு திடீர் விஜயம் செய்த புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அதிபர் புடின் நேற்று இரவு மரியுபோல் நகரைச் சுற்றி வரும் காட்சிகளை அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அதிபர் புடினின் இந்த பயணம் உக்ரைன் - ரஷ்யா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விஜயத்தின் போது மீள்குடியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களைச் சந்தித்து புடின் கலந்துரையாடியுள்ளார்.
மற்றும் துணைப் பிரதமர் மராட் குஸ்னுலின் மூலம் புனரமைப்பு பணிகள் குறித்தும் வீடுகள், பாலங்கள், மருத்துவமனைகள்,போக்குவரத்து வழிகள் மற்றும் கச்சேரி அரங்கம் ஆகியவற்றை மீண்டும் கட்டுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
புட்டின் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உக்ரைனின் மரியுபோல் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.