Home Archive by category

ஜெர்மனிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே போர் மூளும்; கணித்தது யார் தெரியுமா?

2023ஆம் ஆண்டு இன்னும் சில நாள்களில் பிறக்க உள்ளது. புத்தாண்டில் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு செழித்து வாழ வேண்டும் என்ற வழமையான வேண்டுதல்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய நிலைமையை விட மோசமான நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கணிப்பும் பல்வேறு தரப்பில் இருந்து வெளியாகி வருகிறது. 

அந்த வகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் டிமிட்ரி மெட்வெடேவ். தற்போது, ரஷ்யாவின் ராணுவத்துறையை மேற்பார்வை செய்யும் ஒரு அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் இவர், புதினின் நம்பிக்கையை பெற்றவர்களுள் ஒருவர். ரஷ்யாவின் வளர்ச்சியில் இவரின் பங்கும் அளப்பரியது.

2008ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக இருந்தார் மெட்வேடேவ். அப்போது, புதின் பிரதமராக செயலாற்றி வந்தார். 2012-2020ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் பிரதமராக டிமிட்ரி மெட்வெடேவ் இருந்தார். 


அத்தகைய நபர், நேற்று முன்தினம் ட்விட்டர் 2023ஆம் ஆண்டு குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார். மொத்தம் 10 கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். அதில், முக்கியமானவை பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் என்பதும், பிரிட்டன் சேர்ந்தவுடன் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்பதையும் கணித்துள்ளார். 

மேலும், ஜெர்மனிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே போர் மூளும் என்று கணித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய பங்குசந்தைகள், நிதி ஆதார நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கா, ஐரோப்பியாவை விட்டு வெளியேறி, ஆசியாவை நோக்கிச் செல்லும் என்றும் கணித்திருக்கிறார். 

முக்கியமாக, அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் என்றும் இதனால், டெக்சாஸ் தனி சுதந்திர மாகாணமாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மற்றும் மெக்ஸிகோ கூட்டணி அமைக்கும் என்றும் உள்நாட்டு போர் முடிந்து நடத்தப்படும் தேர்தலில் எலான் மஸ்க் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து, ரஷ்யா அரசு உயர் அதிகாரியின் இந்த ட்வீட்கள் அட்டகாசமாக உள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இருப்பினும், அதில் சிலவற்றையும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இவரின் கணிப்புகள் எந்தளவிற்கு துல்லியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Related Posts