Home Archive by category

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்! 2200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

வானிலை காரணமாக அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில், வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது. அதே சமயம் தொடர் பனிப்பொழிவும் மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இதற்கிடையில், இந்த சீசனில் முதல் முறையாக மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக 2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்தப்பித்து போன இயல்பு வாழ்க்கை

தொடர் பனிப்பொழிவு, இடைவிடாத மழை மற்றும் குளிர் காற்று காரணமாக, அமெரிக்கா முழுவதும் விமானப் பயணம் தவிர, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான கண்காணிப்பு தளமான ஃப்ளைட்அவேர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும் கடந்த இரவு 7 மணி வரை 2270 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களை ரத்து செய்துள்ளன. மேலும் இன்று மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சனிக்கிழமைக்கான 85 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது

CNN அறிக்கையின்படி, வியாழன் மாலை 6 மணி வரை, இந்த சீசனில் 7500க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிகாகோ மற்றும் டென்வரில் நிலைமை மோசமாக உள்ளது, அங்கு நான்கில் ஒரு பகுதிக்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிகாகோ சர்வதேச விமான நிலையத்தின் பகுதியில், கடும் பனிப் பொழிவின் காரணமாக மாலை 5 மணியளவில் விமான நிலையத்தில் புலப்பாடு முற்றிலும் இல்லை மற்றும் வெப்பநிலை -13 டிகிரி செல்சியஸ் பதிவானது. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் வியாழன் அன்று விமானங்கள் சராசரியாக 159 நிமிடங்கள் தாமதமாகின்றன.

பனிப் புயல் பேரழிவை ஏற்படுத்திய பின்னர் விமானப் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வர்ஜீனியா முதல் மினசோட்டா வரையிலான ஒரு டஜன் நகரங்களை நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் பட்டியலிட்டுள்ளது, அவசரத் தேவை இல்லாவிட்டால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மற்றும் நகருக்கு வெளியே பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு தொடரும்

இதேபோன்ற பனிப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு பயங்கரமான மூடுபனியுடன் இருக்கும் என்று தேசிய வானிலை நிறுவனம் கணித்துள்ளது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பனி உருகும் இரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், கிரேஹவுண்ட் வியாழக்கிழமை ஒரு சேவை எச்சரிக்கையை வெளியிட்டது.  அடுத்த 2 நாட்களில் மிட்வெஸ்டில் பயணிப்பவர்களுக்கு பயண தாமதங்கள் அல்லது விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்படலாம் என்று எச்சரிக்கை செய்தி கூறியது.

அதிபர் ஜோ பிடனின் வேண்டுகோள்

பனிப்புயல் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். மறுபுறம், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் சுகாதாரத் துறையின் கோவிட் வழிமுறைகளை பின்பற்றுமாறு அதிபர் ஜோ பிடன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts