பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மாவட்டமாக ராமநாதபுரம் தேர்வு
வேதாளை கடற்கரையில் இருந்து சமீபகாலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக வேதாளை மீனவ கிராமத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும், அச்சமின்றி மக்கள் நடமாடவும் போலீஸ் அதிவிரைவு படையினர் நேற்று வெள்ளிக்கிழமை(23) துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பொதுமக்கள் அச்சமின்றி வாழ்ந்திடவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவின் அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து சமீபகாலமாக இலங்கைக்கு படகு மூலம் போதைப் பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருவதுடன், இலங்கையில் இருந்து வேதாளைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுகிறது.
கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்த ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று மாலை வேதாளை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு வேதாளை கடற்கரை வழியாக நடைபெற்றது. கொடி அணி வகுப்பை ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தொடங்கி வைத்தார்.
இந்த கொடி அணிவகுப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவின் அதிவிரைவு படையினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சட்ட ஒழுங்கு போலீசார் என மொத்தமாக 82 பேர் கலந்து கொண்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவின் அதிவிரைவு படையினர் தமிழகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களை தேர்வு செய்து அங்கு பிரச்சனைக்குறிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில் ராமநாதபுரம் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு அதில் முக்கிய இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
வேதாளை மீனவ கிராமம் இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் வேதாளை கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகளவு நடைபெற்று வருகிறது எனவே; பொதுமக்கள் அச்சமின்றி வாழ்ந்திடவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் வேதாளையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
வேதாளை கடற்கரை வழியாக தொடர்ந்து நடைபெற்று வரும் கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மத்திய மாநில பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனைச் சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்தார்.