மக்கள் போராட்டதிற்கு அடிபணிந்தது சீன அரசு
சீனாவில் கடந்த சில தினங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் மேற்கு பகுதியான ஷின்ஜியாங் பிராந்தியத்தில் கடந்த 100 நாட்களுக்கு மேலால ஊரடங்கு அமலில் உள்ளது. நாட்டில் உள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஷின்ஜியாங் பகுதியில் தான் அதிகநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள சுமார் 4 மில்லியன் குடியிருப்பு வாசிகள், கடந்த 100 நாட்களாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
அதேபோல் சீனாவின் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள், சுமார் 10 மில்லியன் பேர் இந்த பிராந்தியத்தில் தான் வசித்து வருகின்றனர். சீனாவில் சிறுபான்மையின உய்குர் முஸ்லிம்களுக்கு, அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுவதாகவும், தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் கடந்த நவம்பர் 27ம் திகதி இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே செல்ல முயன்றபோது, ஊரடங்கு காரணமாக குடியிருப்பு வளாகத்தின் பாதிப் பகுதி மூடப்பட்டிருந்ததால் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கோபமடைந்த மக்கள், நீண்ட கால ஊரடங்கை தளர்வு படுத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘அடிமையாக இருப்பதை வெறுப்பவர்களே எழுங்கள்’ என்ற சீனாவின் தேசிய கீதத்தை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. ஷின்ஜியாங் மக்களின் உரிமை போராட்டாத்தால் வெகுண்டெழுந்த மற்ற பிரந்திய மக்களும், போராட்டத்தில் குதித்தனர். இதனால் சீனா முழுவதும் போராட்ட களமாக மாறியுள்ளது.
தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். அதனால் நாடுமுழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கை திரும்ப பெறுக என்றும் அதிபர் ஷி ஷின்பிங்குக்கு எதிரான வாசகங்களை கொண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வ வல்லமை மிக்க தலைவராக கருதப்படும் ஷி ஷின்பிங், சீனா பிரதமராக பதவியேற்ற பின் நடக்கும் மாபெரும் போராட்டம் இது எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்த நிலையில் மக்கள் போராட்ட்த்திற்கு அடிபணிந்துள்ளது சீன அரசு. ஆமாம் ஜீரோ கோவிட் பாலிசியை கடைபிடிக்கும் சீனாவில், கொரோனா பரவல் இருந்தாலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியும், தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த பகுதியான ஷின்ஜியாங் மற்றும் பல்வேறு நகரங்களில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்து கட்டுப்பாடுகளிலும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களும் குறைக்கப்பட்டு வருகிறது.