Home Archive by category

இலங்கையர்களை அச்சுறுத்தும் நோய்

நாடு முழுவதிலும் ஆண், பெண் இருபாலரிடையேயும் பெருங்குடல் புற்றுநோய் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் கண்டறியப்படும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

ஆண், பெண் இருபாலருக்குமிடையே பெருங்குடல் புற்றுநோய், குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. 

இதற்குக் காரணம் மக்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதே முக்கிய காரணமாகும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யத் தவறினால், அது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது என இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆலோசகரும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணருமான வைத்தியர் நடராஜா ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஆண் மக்களிடையே வாய்வழி புற்றுநோய்கள் மிகவும் பொதுவான வீரியம் மிக்க புற்றுநோயாகும். ஆண்களில் இரண்டாவது மிகவும் பொதுவானது நுரையீரல் புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோயானது பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாகும், அதைத் தொடர்ந்து தைராய்ட் புற்றுநோய் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் அதிகளவில் நொறுக்குத் தீனிகளை உட்கொள்கின்றனர் மற்றும் அவர்கள் உடல் செயற்பாடுகளில் ஈடுபடுவது அரிது என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பல வண்ண பழங்களை உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால், குடலில் ஏற்படும் புற்றுநோய்களை தவிர்க்கலாம், என பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts