Home Archive by category

முன்னாள் விடுதலைப் புலிகளை புதுடில்லிக்கு அழைத்த இந்தியா

இந்தியாவின் தலைநகருக்கு அண்மையில் நாங்கள் அழைக்கப்பட்டதுடன் அங்கு நாங்கள் சந்திப்புக்களையும் நடத்தியுள்ளோம். தமிழர்களின் பிரதிநிதிகளாக எமக்கு இந்தியா அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடையினை இந்தியா நீக்கவுள்ளதாக, முன்னாள் விடுதலைப் புலிகளான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலைக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றாக இணைந்து உதவிகளை செய்து பின்னணியில் நின்றவர்கள் வை சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ந்தும்எங்கள் வளங்களை நிலப்பரப்புக்களை அன்னிய நாடுகளுக்கு விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அம்பாந்தோட்டை, கொழும்பு, காலி முகத்திடல் கடற்பரப்பு என்பன சீனாவிற்கு விற்கப்பட்டுள்ளன.தொடர்ந்து சீனா வடக்கில் தனது ஆதிக்கத்தினை செலுத்துவதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் களமிறக்கப்பட்டுள்ளர்கள்து.

தற்போதும் இரகசியாமன முறையில் இலங்கையின் அமைச்சுக்களுக்கு ஊடாக அந்த வேலைத் திட்டத்தினை சீனா முன்னெடுத்து வருகின்றது கடற்தொழிலில் ஈடுபடும் எமது உறவுகளை முன்னேற்றுவதாக கூறி பல அபிவிருத்திகளை முன்னெடுத்து உள்ளீர்க்கின்றார்கள்.இலங்கையில் கடற்தொழில் அமைச்சுக்கூடாகவும் முன்னெடுத்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலைப் பகுதி முக்கியமான இயற்கை தளமாகும்.இந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்க சீனா இரகசியமான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது. இதன்நோக்கம் சாலைக்கு நேராக இருப்பது இந்தியாவின்(தமிழகம்) வேதாரணியம். இந்தியாவை கண்காணிப்பதற்காக சீனா தளத்தினை அமைப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு பல ஆயுத உதவிகளை செய்தது பாகிஸ்தான். பல்குழல் எறிகணைகள்,விமானங்கள்,கனரக ஆயுதங்களை வழங்கி இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்வதற்கு மிக மோசமாக உதவிசெய்த நாடு பாகிஸ்தான்.

அந்த நாடு பல தீவிரவாத அமைப்புக்களை இயக்கிவருகின்றது. உலகத்தில் பல பயங்கரவாத தீவிரவாத செயற்பாடுகளுக்கு காரணமாக இருக்கின்றவர்களுக்கு உதவிசெய்கின்றார்கள்.

போர் நிறைவடைந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் தூதுவர் தமிழர் தாயகத்தினை பார்வையிட்டுள்ளார். பருத்தித்துறை துறைமுகத்தினையும் பார்வையிட்டுள்ளார். இதன் நோக்கமானது தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயமாக அமையாது. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.

தமிழ் மக்களின் வளங்களை சுறண்டுவதும் எமது அயல்நாடான இந்தியாவை கண்காணிப்பதும்தான் இவர்களின் நோக்கம். இந்த விடயத்தினை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த மண்ணுக்காக போராடி மரணித்த மாவீரர் நாளினை நினைவிற்கொள்கின்ற அமைதியான சூழ்நிலையில் தமிழ்மக்களின் படுகொலைகளுக்கு காரணமாகவும் மாவீரர்களுக்கு காரணமாகவும் இருந்த அந்நிய தேசத்தின் பிரதிநிதிகள் எமது மண்ணில் கால்மிதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

இன்று நாங்கள் அரசியல்ரீதியான உரிமையினை வென்றெடுக்க தீர்க்கமான முடிவுகளுக்குள் வந்துள்ளோம் அதன் ஆரம்ப புள்ளியான 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அந்த தளத்தில் நின்றுகொண்டு அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு சமஷ்டி ஆட்சிமுறையினை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இது தொடர்பில் அதிகாரமுள்ள தரப்புடன் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் எமது அயல்நாடான இந்தியாவுடன் ஒரு உடன்படிக்கையினை செய்வதற்கான ஏற்பட்டினை செய்துகொண்டிருக்கின்ற வேளையில் பாகிஸ்தானின் வருகை நல்ல விடயமல்ல.

தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்போகின்றோம் அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு வருமாறு இலங்கை அரசாங்கம் அழைக்கின்றது. அதே சூழலில் தமிழ்மக்களுக்கு எதிரான சக்திகளையும் தமிழர் பிரதேசத்தில் தங்கள் ஆக்கிரமிப்புக்கான அனுமதியையும் கொடுத்து அனுப்புகின்றார்கள்.

இந்த அரசாங்கத்தின் இரட்டை முகத்தினை நாங்கள் பாக்கவேண்டும் அரசியல் வாதிகள் தெளிவாக இருக்கவேண்டும் யாழ் மாநாகரசபை மேயர் பாகிஸ்தானின் தூதுவரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார் இந்தச் சூழ்நிலையில் இதுதேவைதான என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.

தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையாக இருக்கின்ற இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் ஒன்றித்துப் போகவேண்டிய தேவை உள்ளது. இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். மாகாணசபை தேர்தல் நடத்தவேண்டும் என்று நாங்கள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு சொல்லியுள்ளோம் எதிர்வரும் காலங்களில் இந்தியாவுடன் பேசவுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக இந்தியாவிடம் நாங்கள் கோரியுள்ளோம் எதிர்காலத்தில் இந்தியா அக்கறைசெலுத்தி செயற்படும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது இந்திய அரசங்கத்தின் நல்லெண்ண நோக்கமாகும். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். செயல்ரீதியாக இந்தியா தமிழர்கள் தன்னுடைய நிலைப்பாட்டினை சொல்லி இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.

விடுதலைப் புலிகளாகிய நாங்கள் 35 ஆண்டுகளின் பின்னர் அண்மையில் இந்தியாவின் தலைநகருக்கு அழைக்கப்பட்டு சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கீகாரத்தினை இந்தியா வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடையினை இந்தியாநீக்கி தமிழ்மக்களுக்கான சுதந்திரம், உரிமையினை வென்றெடுக்க இந்திய அரசாங்கம் தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

Related Posts