இந்தோனேசிய பூகம்பத்தில் உயிரிழப்பு 268 ஆக உயர்வு
இந்தோனேசிய பூகம்பத்தில் உயிர் தப்பியோரை தேடி மூன்றாவது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்றபோதும் அங்கு தொடரும் பூகம்பத்திற்கு பின்னரான அதிர்வுகள் அந்த மீட்புப் பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை பூகம்பம் ஏற்பட்டது தொடக்கம் இந்தப் பிராந்தியத்தில் சுமார் 140 பின் அதிர்வுகள் பதிவாகியதாக மேற்கு ஜாவா ஆளுநர் ரிட்வான் காமில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, பல சிறுவர்கள் உட்பட 268 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 151 பேர் காணாமல்போயிருப்பதோடு 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மீட்பு நடவடிக்கைக்காக சியன்ஜுன் நகருக்கு சென்றுள்ளனர். எனினும் வீதிகள் சேதமடைந்து தொடர்ந்து அதிர்வுகள் பதிவாகி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மக்கள் செறிந்து வாழும் சியன்ஜுன் நகருக்கு அருகாமையிலேயே 5.6 ரிக்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பம் இடம்பெற்றது. இதனால் பல கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. கட்டட இடிபாடுகளில் சிக்கியே பலரும் உயிரிழந்துள்ளனர்.