சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை! பல்டி அடித்த கேரள அரசு
கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து "பெண்கள் அனுமதி" என்ற அறிவுறுத்தல் திரும்ப பெறப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் மற்றும் மாதவிடாய் வயதுடைய பெண்கள் செல்வது அனுமதிக்கப்படுவதில்லை என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாகும்.
சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இந்தமுறை கொரோனா கட்டுப்பாடு எதுவும் இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக பூஜை.க்காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக அதிக அளவிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பக்தர்கள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வழங்கப்பட்டது.
அதில், உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் 2018 தீர்ப்பை மேற்கோள் காட்டி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இது "மோசமான விளைவுகள்" ஏற்படுத்தும் என்று கேரளா பாஜகவும் எச்சரித்தது.
இதைத்தொடர்ந்து, கோயில் விவகார அமைச்சரும் சிபிஐ (எம்) தலைவருமான கே ராதாகிருஷ்ணன், வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டில் தவறாக அச்சடிக்கப்பட்டு விட்டதாகவும், அந்த கையேடு திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இருப்பினும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான கேரள அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதுவும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோவிலின் மூலஸ்தானமான நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களால் நடைபெற்றது. அதேநேரத்தில் ஒரு சில இளம் பெண்கள் ஜனவரி 2019 இல் சபரிமலை கோயிலுக்குள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.