Home Archive by category

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றை நாடும் இந்தியா?

இலங்கையில் விளக்கமறியலில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோரியுள்ளார்.

இது தொடர்பில் தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 27ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்களின் 98 விசைப்படகுகள் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே தமிழக மீனவர்கள் கடற்பகுதியில் இருந்து இந்திய மீனவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் வேண்டும் என்ற தனது ஆலோசனையை, அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதனிடையே, ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உள்துறை அமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது கருத்துரைத்த தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது, இலங்கைக்கு சொந்தமான பகுதியில் அல்ல என்றும் கூறியுள்ளார்.

எனினும் இலங்கை கடற்படை அவர்களை சுற்றி வளைத்து, தமிழக மீனவர்களை இலங்கை பகுதிக்குள் தள்ளி பின்னரே அவர்களை கைது செய்தது.

எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்திய அவர், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இந்திய அரசு கச்சத்தீவை மீட்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கலாம். தேவைப்பட்டால், இதற்காக சர்வதேச நீதிமன்றத்தையும் அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts