விடுதலைப்புலிகளின் ஆயுதம்,நகைகளை தேடி வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது.
இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் அடங்கியிருந்தனர்.
குறித்த வீட்டில் புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரி இருந்தனர்.
நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று காலை 9,30 முதல் மதியம் 2 மணி வரையில் புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
புதையல் அகழ்வதற்காக விசேட அணியினர் வந்திருந்த நிலையில் , அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது.
மதியம் 2 மணி வரையில் அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற போதும், எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.