ஓ.பி.எஸ். யாரை சந்தித்தாலும் எதுவும் நடக்க போவதில்லை- ஜெயக்குமார்
சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை. திட்டங்களுக்கான பெயர் சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக நடக்கிறது. நரிக்குறவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதல்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.
ஆனால் திமுக தாங்கள்தான் காரணம் என கூறுகின்றனர். மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது அ.தி.மு.க., இன்று வரை தி.மு.க. அதற்கு குரல் கொடுக்கவில்லை. ஒற்றைத் தலைமையுடன் வலுமிக்க இயக்கமாக அ.தி.மு.க. இருக்கிறது.
ஓ.பி.எஸ். பண்ருட்டியார் உள்பட யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இதனால் எந்த பயனும் இல்லை. எதுவும் நடக்காது. ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு. சசிகலாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம், சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா. கட்சிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே அ.தி.மு.க. அலுவலகத்தில் பன்னீர்செல்வம் படத்தை நீக்கியது சரிதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.