Home Archive by category

மிக மோசமான வருகையைப் பதிவுசெய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஒன்பதாவது நாடாளுமன்றம் தனது பதவிக் காலத்தின் இரண்டு வருடங்களை நிறைவு செய்யும் நிலையில் பல அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மிகவும் மோசமான வருகைப் பதிவேடுகளைக் கொண்டவர்களில் இருப்பது தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைக்கு ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தகவலின்படி 2020 ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் 2022 ஆகஸ்ட் 2022 வரையிலான இரண்டு ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்றம் 182 அமர்வுகளை நடத்தியது.

தற்போது அமைச்சரவை பொறுப்புக்களை வைத்திருப்பவர்களில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மிகவும் மோசமான வருகைப் பதிவைக் கொண்டுள்ளார். வெறும் 67 அமர்வு நாட்களிலேயே அவர் நாடாளுமன்றுக்கு சென்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெறும் 68 நாட்களே நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 90 நாட்களும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 98 நாட்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து 100 நாட்களுக்கும் குறைவான நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (70) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். நோஹரதலிங்கம் (84) இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (85) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் (88) இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ (89) முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க (94) நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (95) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் (97) நாட்கள் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மிகவும் மோசமான ஒட்டுமொத்த வருகைப் பதிவைக் கொண்டுள்ளார். எவ்வாறாயினும் உடல்நலக்குறைவு காரணமாக சம்பந்தனுக்கு விடுமுறை வழங்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடைசியாக இந்த ஆண்டு மே 18 அன்று அவருக்கு மூன்று மாத விடுமுறைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

அதேபோன்று 49 நாட்கள் மாத்திரம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக இந்த ஆண்டு மே 18 முதல் மூன்று மாதங்களுக்கு அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.

தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இந்த வருடம் பெப்ரவரி 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தில் மூன்று மாத விடுமுறையை பெற்றிருந்தார்.

தரவுகளின் படி 50 நாட்களுக்கும் மேலாக 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவானந்தன மற்றும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றம் கூடிய 182 நாட்களிலும் பிரசன்னமாகியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் யதாமினி குணவர்தன ஆகியோர் ஒரு நாள் அமர்வை மாத்திரம் தவறவிட்டுள்ளனர்.

Related Posts