Home Archive by category

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் எதிர்ப்போம்; சுமந்திரன் தெரிவிப்பு

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம். அது சீனாவிற்கு நாங்கள் எடுக்கின்ற நிலைப்பாடு அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

'பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும்' எனும் கருப்பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்கள் வடக்கு கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும்

அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நேற்று(31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம்.அது சீனாவிற்கு நாங்கள் எடுக்கின்ற நிலைப்பாடு அல்ல.

இந்த விடயம் பக்கம் சார்ந்து எடுக்கும் நிலைப்பாட்டில் நாம் இல்லை.இவ்வாறான வேவு கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருப்பதனானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதிப்பாகவே இருக்கின்றது”என கூறியுள்ளார்.

மேலும், இக் கலந்துரையாடலின் போது,  ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அரசியல் ரீதியான குழப்பங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. அண்மையில் ஜனாதிபதி தெரிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தெரிவாகி இருந்தார். எங்கள் மக்களின் கருத்துக்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லாட்சி அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டு கொடுத்தது. எதை சாதித்தது. நல்லாட்சியின் கதாநாயகர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த நாட்டில் மூன்று இனங்கள் வாழக்கின்றனர். எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என்றார்.   

இந்த கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்குபற்றியதுடன் சமகால அரசியல் போக்கு 8வது ஜனாதிபதி தெரிவும் கூட்டமைப்பின் வாக்களிப்பு தீர்மானம் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்கினர்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசுக்கட்சியினரின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் சார்பிலான கேள்விகளை முன்வைத்தனர்.

குறித்த கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபாரணம் சுமந்திரன், இரா சாணக்கியன் உள்ளிட்டோர் தெளிவான விளக்கங்களை இக்கலந்துரையாடலில் முன்வைத்ததுடன் எதிர்வரும் காலங்களில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.   

Related Posts