Home Archive by category

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்படும் சிறப்பு பிரிவு

நாட்டிலிருந்து மூலம் வெளியேறும் பயணிகளை சோதனையிட இன்று முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு பிரிவு அமைக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இராணுவத்தினர் நேற்று (19) தெரிவித்தனர்.

மனித கடத்தல், குற்றவாளிகள் தப்பிச் செல்தல் மற்றும் ஏனைய முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் இவ்வாறு குறித்த பிரிவு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த பிரிவில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) , அரச புலனாய்வு சேவை (SIS) , குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றின் அதிகாரிகள் காணப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பணியாற்றும் விடுமுறை விசா (Visit Visa) மூலம் வெளியேற விரும்புபவர்களின் பயண மற்றும் பிற ஆவணங்கள் இவர்களால் ஆய்வு செய்யப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் துணை பொது மேலாளர் செனரத் யாப்பா ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"இந்தப் பிரிவின் மூலம் ஆட்கடத்தலை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க இலங்கை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதாக அமையும்.

அதன்படி, தேசிய கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த பிரிவு அமைக்கப்படும்.

மனித கடத்தல்காரர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெண்கள் என்பதால் இலக்கு குழு முக்கியமாக பெண்களாக காணப்படுவர்.

ஆயிரக்கணக்கான இலங்கையர்கள், முக்கியமாக பெண்கள் பணியாற்றும் விடுமுறை விசாவில் (Visit Visa) நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மேற்கு ஆசியாவில் உள்ள வெளிநாட்டு தலைநகரங்களுக்கு சென்று வேலை தேடுவதாக அறியப்படுகிறது.

BIA

BIA

தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் அவர்களது குழுவினர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற இடங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற விரும்பும் நடமாட்டத்தையும் இந்த பிரிவு கண்காணிக்கும்.

சில ஊழல் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சில சமயங்களில் மனித கடத்தல் மையமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறிவிட்டது.

பெண்கள் உள்ளிட்ட 58 இலங்கையர்களைக் கொண்ட குழு, குவைத்தில் இருந்து இந்த வார தொடக்கத்தில் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்,

எதிர்வரும் வாரங்களில் மேலும் பலர் இவ்வாறு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் , 42 இலங்கையர்கள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பாதுகாப்பான இல்லங்களிலும், 13 பேர் ஓமானிலும், 12 பேர் ரியாத்திலும், ஐந்து பேர் ஜித்தா நகரிலும் உள்ளதாகவும், அவர்கள் எதிர்வரும் வாரங்களில் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்." என தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த ஏழு பேரையும் எல்லைப் படையினர் கைது செய்து, தொடர் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு ஜோர்தானில் இருந்து இலங்கையர்கள் உட்பட 52 பேரும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23 பேரும் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts