Home Archive by category

'இதயத்தை நொறுக்குகின்றது' - ஒடிசாவில் நடந்த பயங்கர விபத்துக்கு கனடா பிரதமர் இரங்கல்

ஒடிசாவில் நடந்த பயங்கர தொடரூந்து விபத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் கடுகதி தொடரூந்து ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு மற்றொரு சரக்கு தொடரூந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

ஒடிசாவின் பாஹா நாகா பஜார் தொடரூந்து நிலையம் அருகே தொடரூந்துகள் மோதிய இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கோர சம்பவத்துக்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் ஒடிசாவில் நடந்த தொடரூந்து விபத்து குறித்த படங்களும் தகவல்களும் என் இதயத்தை நொறுக்குகின்றன.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த கடினமான சூழலில், இந்திய மக்களுடன் கனடா நாட்டு மக்கள் துணை நிற்கின்றனர்” என்று குறிப்பிட்டள்ளார்.

Related Posts