Home Archive by category

திருச்சி சிறப்பு முகாமுக்குள் ஈழத் தமிழர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கல்

தமிழக - திருச்சி சிறப்பு முகாமுக்குள் ஈழத் தமிழர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாட்களாக எந்த ஒரு உணவுப் பொருட்களையும் வழங்காது தம்மை தமிழக அரசு நசுக்குவதாக அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, முகாமுக்குள் 500 இற்கும் மேற்பட்ட ஆயுதம் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இரவோடு இரவாக தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மிகவும் கொடூரமான முறையில் அங்கிருக்கும் ஈழத் தமிழர்களை அடக்கி வருவதாக கூறப்படுகிறது.

அங்கு தமிழக அரசு மனித சித்திரவதையை அரங்கேற்றுவதாகவும் இதிலிருந்து மீள முடியாமல், தமது பிரச்சினைகளை வெளியிலே கொண்டு செல்ல முடியாமல், மிகவும் மோசமான நிலைக்கு அங்கிருப்போர் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது திராவிட முன்னேற்றக் கழக அரசு திட்டமிட்டு தங்கள் மீது நடத்துகின்ற ஒரு இன வன்முறை என்றே அவர்கள் கூறுகின்றனர்.

இதனை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அத்தோடு நான்கு பேர் தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையிலே இருக்கும் நிலையில், அவர்களைக் கூட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லாது, செய்திகளை மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழர்கள் மீது மிகவும் மோசமான கொடுமைகள்

தமிழக அரசு தமிழர்கள் மீது மிகவும் மோசமான கொடுமைகளை செய்து கொண்டிருக்கிறது. ஆகவே இந்தத் தகவலை உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகத்திலே இருக்கின்ற புலம்பெயர் வாழ் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் தமக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தம் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற இந்த ஒடுக்கு முறையினை எதிர்த்து குரல் கொடுத்து, போராடி தமக்கு ஒரு நீதியான நியாயமான விடுதலையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்த தகவலை உறுதிசெய்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts