Home Archive by category

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறும் நினைவேந்தல்

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித பேரவலம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கான உறவுகளின் வானைப்பிளக்கும் கதறலுடனும் கண்ணீருடனும் வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் முற்றத்தில்  உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு, சரியாக காலை 10.30மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு பொதுச்சுடரேற்றப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது குடும்பத்தில் 13பேரை இழந்த மன்னாரைச் சேர்ந்ந தாயார் ஒருவர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அதேவேளை சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. தென்கைலாய ஆதீன குருமுதல்வர் அகத்தியர் அடிகளார் அவர்களால் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்ற உறவுகள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தினர், முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களுடைய உறவினர்கள் என பெருந்திரளானவர்களின் பங்குபற்றலுடன் உணர்வழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

Related Posts