Home Archive by category

இந்திய அணிக்கு தேர்வாகவுள்ள இளம் ஐ.பி.எல் வீரர்கள்

எதிர்வரும் சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் என பலர் இந்திய அணிக்கான தேர்வு போட்டியில் உள்ளனர்," என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2020, 19 வயது உலக கோப்பை அணியில் அதிக ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருது வென்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இவர், சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறார்.

இதுவரை 12 போட்டிகளில் 575 ஓட்டங்களை (1 சதம், 4 அரைசதம்) எடுத்து, அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் இரண்டாவதாக உள்ளார்.

இதேபோல கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், 12 போட்டியில் 353 ஓட்டங்களை குவித்து, சிறந்த 'பின்னணி துடுப்பாட்ட வீரராக' திகழ்கிறார்.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவிக்கையில்,

''இந்திய அணி நிர்வாகம் வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் அதிக கவனம் செலுத்தினால், தேர்வாளர்களுக்கு பல்வேறு வீரர்கள் கிடைத்துள்ளனர்.

ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து அடுத்த ஆண்டு மேற்கிந்தியதீவில் நடக்கும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கு, வேகமாக தயார் செய்ய வேண்டும்.

ஒருவேளை தேர்வாளர்கள் இதைச் செய்யவில்லை என்றால், அவர்கள் எவ்வாறான சிறந்த வீரர்களை தேடப் போகின்றனர் என எனக்குத் தெரியவில்லை." என தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், "ஜெய்ஸ்வால் இந்திய அணியின் கதவை மட்டும் தட்டவில்லை.

தொடர்ந்து சீரான முறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

உள்ளூர் போட்டிகளில் அசத்தியதை, அப்படியே ஐபிஎல் தொடரிலும் தொடர்கிறார். இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பாகத் தான் உள்ளது," என தெரிவித்துள்ளார்.

Related Posts