Home Archive by category

கரையில் ஒதுங்கிய படகில் துப்பாக்கிகள்; மகாராஷ்டிரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் அடையாளம் தெரியாத படகு ஒன்றும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பரத்கோல் என்ற இடத்தில் ஒரு படகும் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

முன்னதாக ,மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் படகு ஒன்று பணியாளர்கள் இல்லாமல் இருப்பதை சில உள்ளூர்வாசிகள் பார்த்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

எந்தவொரு பயங்கரவாத கோணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்கிறோம். போலீசார் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர். படகில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது.

படகு ஆஸ்திரேலிய பிரஜைக்கு சொந்தமானது. படகின் இயந்திரம் கடலில் உடைந்ததாகவும், அந்தப் படகில் இருந்தவர்கள் கொரிய படகு மூலம் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது என்றார் ஃபட்னவீஸ்.

முன்னதாக, ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் துதே மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகை சோதனையிட்டனர்.

Related Posts