Home Archive by category

“நானும் தோனி ரசிகன்...” - முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கை

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொடர்ந்து விளையாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினை, சின்னம் வெளியீட்டு விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் விளம்பர தூதராக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினைக்கு வீரன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் தருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,  சென்னையின் செல்லப் பிள்ளை தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். தோனி சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அதனால் தான் இன்று அவர் விளம்பர தூதராக உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் போல நானும் ஒரு தோனி ரசிகன் தான்.

தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி, லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக விளங்குகிறார்.

தமிழகத்தில் பல தோனிகளை உருவாக்க வேண்டும். கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Posts